தங்காலையில் போதைப்பொருளுடன் 3 லொறிகள் கைப்பற்றப்பட்ட விடயம் ; சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

45 0

தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருளுடன் மூன்று லொறிகள் கைப்பற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

09ஆம் திகதி வியாழக்கிழமை சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தங்காலை சீனிமோதர மற்றும் கொடெல்லாவ பகுதியில் செப்டம்பர் 22 ஆம் திகதி ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று லொறிகள் கைப்பற்றப்பட்டன. குறித்த லொறிகளில் இருந்து சுமார் 700 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பூமிதெலா என்பவரது ஆதரவாளரான பெலியத்தே சனா (54) மற்றும் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகின் உரிமையாளர் (50) ஆகியோர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் வியாழக்கிழமை (9) வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களையும் கருத்தில் கொண்ட நீதவான் சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியளித்து எதிர்வரும் 13 ஆம் திகதிவரை கிறிஸ்தோபர் பதுகே ஜயலத் மற்றும் வீரசிங்ஹகே சனத் என்னும் “பெலியத்த சனா” ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த உனகுருவே துசிதவின் இரண்டு மகன்கள், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொரிகளின் பதிவு செய்யப்பட்ட மூன்று உரிமையாளர்கள் மற்றும் லொறி சாரதி, படகு உரிமையாளர் மற்றும் பெலியத்தே சன உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.