கிழக்கு மாகாண சபைக்கு 1800 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு – கந்தசாமி பிரபு

78 0

எமது அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாண சபைக்கு 1800 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம். கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற திணைக்களங்களுக்கு அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு, தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மாகாண விசேட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்புத் திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் வெள்ளிக்கிழமை (3) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கந்தசாமி பிரபு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

அந்த வகையில் கால்நடை திணைக்களங்கள் மற்றும் புதிய ஏனைய செயற்றிட்டங்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 நாட்களைக் கடந்தும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

எமது அரசாங்கம் உருவாகி தற்போது ஒரு வருடம்தான் கடந்திருக்கிறது. அப்பண்ணையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருவோம் என நாம் கடந்த தேர்தல் காலத்திலும் குறிப்பிட்டிருந்தோம். அதற்கான முயற்சிகளை நாம் அண்மையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், இணைந்து முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அதில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 1600 ஹெக்டேயர் காணியை முதற்கட்டமாக மேய்ச்சல் தரைக்காக விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெகுவிரைவில் பண்ணையாளர்கள் கோருகின்ற 3000 ஏக்கர் மேய்ச்சல் தரைப் பகுதியை விடுவிப்பதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

தும்பங்கேணி கால்நடை வைத்தியர் கதீஸ்காந் யதுஷனாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், விவசாய கால்நடை, நீர்ப்பாசன அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், சுற்றுலாதுறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளருமான வாணி செல்லப்பெருமாள், போக்குவரத்து அமைச்சின் இணைப்பாளர் சனோஜன் மற்றும் போரதீவுப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.கந்தப்போடி, க.மிருத்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.