ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

33 0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபரான வர்த்தகர்  டுபாயில் இருந்து இன்றைய தினம் காலை 08.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தின்  (Green Channel)  வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சோதனையில் சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த  பயணப்பொதிகளில் இருந்து 120,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 600 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.