தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மாணவிகள் சாதனை!

40 0

2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டி செப்டெம்பர் மாதம் 21 முதல் 25 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றது.

இப்போட்டியில் TMA அக்கடமியின் ஊடாக மாவட்ட குத்துச்சண்டைப் பயிற்றுனர் தேசிந்தன் வழிகாட்டுதலின் கீழ், மு/இரணைப்பாலை றோ.க.ம.வி மாணவி மோகனதாஸ் அபிசாளினி 16 வயதுக்குட்பட்ட 50 – 52 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்த பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியில் பெறப்பட்ட முதல் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவியின் வெற்றிக்கு பாடசாலை அதிபரின் ஊக்கமும், பெற்றோரின் உறுதுணையும் பெரிதும் காரணமாக அமைந்துள்ளது.

மேலும் கடந்த ஆகஸ்ட் 25 முதல் 30 வரை காலி மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற 49 ஆவது தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் அதே TMA அக்கடமியின் பயிற்சியில் பங்கேற்ற இந்திரசேகரம் லதுர்சனா 50 – 52 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இரு மாணவிகளின் இச் சிறப்பான சாதனை, மாவட்டத்தில் குத்துச்சண்டை விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.