யாழ் நகரின் கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை

65 0

யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில்  தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வடங்கு மாகாண ஆளுநருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இத்திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடுவதாகவும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது கைவிடப்பட்டிருந்த நிலையில் மீளவும் செயற்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான இரண்டாம் கட்ட குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு உதவுவதற்குத் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தின் பிரதிநிதிகள், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.