ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மாஸ்க் டிவிசனில் வீடொன்றுக்குள் புகுந்து களவாடிய ஒரு தொகை பணத்துடன் 21 வயது யுவதியை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை(18) மாலை கைது செய்துள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு யுவதி, அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை எடுத்துள்ளார். அதிலிருந்த 95 ஆயிரம் ரூபாய் பணம் , வங்கி தானியங்கி பணம் பெறும் அட்டை ( ATM CARD) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பன அந்த யுவதியால் திருடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டதன் பின்னர், அந்த பெட்டியை தேயிலை செடிகளுக்குள் வீசிவிட்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த ATM அட்டையை பயன்படுத்தி ஹட்டனில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். விசாரணைகளின் பின்னர், அந்த பாதுகாப்பு பெட்டகமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் உதவியுடன் சந்தேக நபரான 21 வயதுடைய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த யுவதியிடமிருந்து 195,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர். அந்த யுவதி, ஹட்டனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான அந்த யுவதியை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

