பிரான்சில் இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் ஒன்று அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு அளவுக்கதிகமாக மக்கள் குவிந்ததால், அவர்களைக் கலைக்க கலவரத் தடுப்பு பொலிசாரை அழைக்கும் நிலை உருவானது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், Krousty Sabaidi என்னும் ஆசிய உணவகம் புதிதாக கிளை ஒன்று திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கடந்த சனிக்கிழமை, 1,000 பேருக்கு இலவச உணவு வழங்குவதாக அறிவித்திருந்தது.
ஆனால், அங்கு சுமார் 3,000 பேர் குவிய, உனவக ஊழியர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகவே, கலவரத் தடுப்பு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

பொலிசார் வந்ததும் கூட்டத்திலிருந்த சிலர் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர்கள் மீது வீச, பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைக்கும் நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், கூட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிக்பாக்கெட் அடிக்க முயன்ற மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நிகழ்ச்சி ரத்தானதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள உணவகம், இன்னொரு நாள் 1,000 பேருக்கு இலவச உணவு அளிக்கப்படும் என்றும், அந்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

