கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட “குஷ்” போதைப்பொளுடன் வெளிநாட்டு பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தபோது, “ராண்டி” என்ற அதிகாரப்பூர்வ பொலிஸ் நாயின் உதவியுடன் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியா – சென்னையை சேர்ந்த 33 வயது புகைப்படக் கலைஞர் என தெரியவந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை (13) 09.45 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர், இந்தியாவின் மதுரைக்குப் புறப்படுவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-139 வரும் வரை போக்குவரத்து முனையத்தில் இருந்துள்ளார்.
இலங்கை ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரது பொதிகளை ஸ்கேன் செய்தபோது, அருகில் பணியில் இருந்த “ராண்டி” என்ற பொலிஸ் நாய், போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.
பொலிஸாரின் 1603 “ராண்டி” என்ற லாப்ரடோர் வகையைச் சேர்ந்த நாய், பல வெற்றிகரமான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளது.
இதன்போது, பொதிகளிலிருந்து சுமார் 85.42 மில்லியன் ரூபா மதிப்புடைய 08 கிலோகிராம் 542 கிராம் எடையுள்ள “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், மேலதிக விசாரணைக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

