பிரசன்ன ரணதுங்க தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!

40 0

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருநந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து இன்று வியாழக்கிழமை (11) வாபஸ் பெற்றுள்ளார்.

இந்த மனு மாயாதுன்ன கொரயா, குமாரத் ரத்னம், சஷி மஹேந்திரன், தமித் தொட்டவத்த மற்றும் அமல் ரணராஜா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறித்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டி அவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா பணத்தை கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.