வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு நிலை தொடர்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறலே சட்டவாட்சியின் மையப்புள்ளி எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதத்தின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, கடந்தகாலத்தின் தொடர்ச்சியை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான வாய்ப்பு தற்போது அரசாங்கத்துக்குக் கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி அவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டுக்கு செயல்வடிவம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறத்தினார்.
அதேபோன்று நிலைமாறுகால நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தை உணர்வதாகக் குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி, அரசாங்கத்தினால் ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலக யோசனை வரவேற்பதாகத் தெரிவித்தார். இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவுகள் காணப்படுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், அச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்படும் சட்டம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன் பொறுப்புக்கூறலே சட்டவாட்சியின் மையப்புள்ளியாக அமையும் என்றார்.

