சட்டவாட்சியின் கோட்பாடுகளுக்கமைய சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது. எனவே 1988, 1989களில் தேசிய சொத்துக்கள் பல அழிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் லால் காந்தவிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
149ஆவது பொலிஸ் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றச்செயல்கள் மேலும் தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் அவர் அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் லால் காந்தவிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1988, 1989களிலேயே நாட்டில் பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
பல தேயிலை தொழிற்சாலைகள், பேருந்துகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், மின் பிறப்பாக்கிகள் மற்றும் நெற் களஞ்சியசாலைகள் உள்ளிட்ட பல பொது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மின் கம்பங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
எனவே அவரிடமிருந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவை தவிர மேலும் பல சம்பவங்கள் ஆதரங்களுடன் நிரூபிக்கக் கூடியவையாகவுள்ளன. எதிர்வரும் நாட்களில் அவை தொடர்பில் ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
இவை மாத்திரமின்றி அதன் பின்னர் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றோம். அத்தோடு சட்டம் எவ்வாறு அனைவருக்கும் சமமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற சட்டத்தின் கோட்பாடுகள் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் யக்கல பிரதேசத்தில் உள்ள முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்துக்குள் காலை 6 மணியளவில் பலவந்தமாக உள்நுழைந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இவற்றை காணொளி பதிவு செய்த கமராக்கள் உள்ளிட்டவை அந்த குழுவினரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
அவை உடைக்கப்பட்டிருந்தாலும் நேரில் கண்ட சாட்சிகளை அழிக்க முடியாது. அது மாத்திரமன்றி இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க கருத்தொன்றையும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் சம்பவ இடத்தில் இருந்திருக்கின்றார் என்பது தெளிவாகிறது.
அதேபோன்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க, சாமிந்த லலித் குமார, ஸ்டெப்னி பெர்னான்டோ உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதற்கான சாட்சிகள் உள்ளன. நீதிமன்ற தீர்ப்பிற்கமைய சட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலேயே இவர்கள் தலையிட்டுள்ளனர்.
பலவந்தமாக அலுவலகத்துக்குள் நுழைந்தமை, அங்கிருந்தமை தாக்கியமை, அவர்களை காயத்துக்குள்ளாக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இவர்கள் செய்துள்ளனர். இது பெலவத்த கட்சி தலைமையகத்திலிருந்து வந்த உத்தரவுக்கமைய இடம்பெற்ற சம்பவமாக இருக்கலாம் என்று நம்புகின்றோம்.
எனவே நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் நீங்கள் கூறிய சட்டவாட்சியின் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார்.

