அநுராதபுரம், மின்னேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மின்னேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருளின் மொத்த நிறை 50 ஆயிரம் கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பக்கோ சமனின்” மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

