250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு

54 0

மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, வருடந்தோறும் நன்நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோகிராம் வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் மற்றும் மீன்வளர்ப்பு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் 95 வகையான நன்னீர் மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 52 இனங்கள் நாட்டிற்கு சொந்தமானவை என குறிப்பிடப்படுகிறது.