பாராளுமன்ற உறுப்பினர்களால் ‘வியத்புர’ வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2022 மே 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீட்டுத்தொகுதியில் 101 வீட்டு அலகுகளை ஒருவருட வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு 2022 ஜூலை 4ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கமைய, 15.5 மில்லியன் குறைந்தபட்ச விலை மற்றும் 22 மில்லியன் உயர்ந்தபட்ச் விலைக்கு சாதாரண மக்களுக்கு விற்பனை செய்கின்ற வீட்டு அலகொன்றை, 13.34 குறைந்தபட்ச விலை மற்றும் 18.21 மில்லியன் அதிகபட்ச விலைக்கும் குறைத்து சலுகை முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கும், விற்பனை விலையில் 25 சதவீதத்தை ஆரம்பக் கட்டணமாக அறவிட்டு, எஞ்சிய தொகையை 15 வருடங்களில் 10 சதவீத ஆண்டுக்கான வட்டி வீதத்தின் கீழ் அவர்களிடமிருந்து அறவிடுவதற்கும், 2024 ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைமையின் கீழ் வீட்டு அலகைக் கொள்வனவு செய்வதற்காக 29 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2024.12.31 அன்று வரை விற்பனை விலையின் 25 சதவீதத்தை வைப்பிலிட்டுள்ளனர். ஆயினும், இச்சலுகை முறையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 92.126 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், செலவை ஈடுசெய்வதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், மேற்குறிப்பிட்டவாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சலுகை முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவிப்பின் சாதாரண மக்களுக்கு குறித்த வீட்டு அலகைக் கொள்வனவு செய்யும் முறை மற்றும் விலைக்கமைய அவர்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

