அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் !

56 0

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக nடானால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகிறார்.

அதன்படி அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்ததுடன் அந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.

அத்துடன், ரஷ்யாவிடம் மசகு எண்ணெய், இராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று ( ஆகஸ்ட் 27)  முதல் அமுலுக்கு வந்துள்ளது. எனவே,அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக அதிகரிக்கின்றது.

இது குறித்து, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆகஸ்ட் 27 ஆத் திகதி (அதாவது இன்று) அதிகாலையில் இருந்து விற்பனைக்காக அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் மற்றும் அமெரிக்காவில் உள்ள களஞ்சியசாலைகளில் இருந்து விற்பனைக்காக வெளியேறும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும்.

அதே சமயத்தில், 27 ஆம் திகதி அதிகாலைக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்ட இந்திய பொருட்கள், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத கூடுதல் வரி பொருந்தாது. இருப்பினும், செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்பு அமெரிக்காவில் பயன்படுத்த அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதுடன், அமெரிக்க சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், புடைவை, தைத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், இரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும்.

ஆனால் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டொலர் மதிப்புள்ள இந்திய பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று இந்திய மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன.

இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு அமுலுக்கு வரும் வேளையில், சீனாவுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

அதாவது கடந்த ஏப்ரல் மாதம், சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். ஒருகட்டத்தில் 150 சதவீத வரி அளவுக்கு உயர்த்தினார். அதேபோல் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதே அளவுக்கு உயர்த்தியது.

இருதரப்பிலும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

சீனாவின் அரியவகை புவி காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமெரிக்க தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வாபஸ் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 55 சதவீதமாக சீனா குறைத்தது. சீன பொருட்கள் மீதான வரியை 32 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம், நவம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது.

இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு இந்த பகிரங்க எச்சரிக்கையை தற்போது டிரம்ப் விடுத்துள்ளார்.