தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்றும் வாழும் அழிக்க முடியாத சித்தாந்தம்…

158 0

உலகின் அசைவியக்கதில் தானே உருவாகிய எதையும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள்.

தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கித் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் மாபெரும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே அவர் தானே உருவாகிய தலைவர் , உருவாக்கப்பட்டவர் அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தலைமையை அழித்து தாங்கள் நினைத்தபடி தமிழினத்தை வழிநடத்த அல்லது சுதந்திர வேட்கையை நீர்த்துப்போகச் செய்ய ஒரு உருவாக்கப்பட்ட தலைமை அவசியமாகின்றது. அதனை உருவாக்கவே இந்த ஓரங்க நாடகம். காரியம் முடிந்ததும் விளக்குக் கொளுத்தும் களத்தில் நிற்பவர்களும் காணாமல் போய்விடுவார்கள். அவர்களிற்குக் கொடுக்கப்பட்ட காலக்கடமை அதுமட்டும் தான். ஆகவே உலகின் சுதந்திரப் போராட்ட வரலாறுகளில் என்றுமே கண்டிராத தன்னிகரில்லாத்தலைமையை அழித்து தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்க கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

இவர்கள் யார்? சிறிலங்கா பௌத்த சிங்களப் பேரினவாதம், இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதம், தென்கிழக்காசியாவை தங்களுடைய பூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் மேற்குலகின் ஏகாதிபத்திய வாதிகள். இந்த மூன்று தரப்புகளிற்கும் மிகப்பெரும் சவாலாக இருந்தது, இருப்பது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிந்தனை ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக அமைதியாக்கப்பட்ட இந்த 15 ஆண்டுகளில் இவர்கள் மிகப்பெரும் புலனாய்வுப் போரை தமிழீழத்தின் மீது தொடுத்துள்ளனர். தமிழீழம் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறது.

இங்கு தேசியத்தலைவரின் சிந்தனை எம்மை வழிநடத்துகிறது. எனவே தேசியத்தலைவருக்கு ஒரு விளக்கை கொளுத்தி விசயத்தை முடிப்போம் என எமது எதிரிகளும், துரோகிகளும், மானிட விடுதலையை ஏற்றுக்கொள்ளாத கயவர்களும் இணைந்து தீட்டிய சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலர் முற்படுகின்றனர்.

இவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். தேசியத்தலைவர் அவர்கள் அன்று தொட்டு இன்றுவரை உலகத்தமிழினத்தின் மனங்களில் ஆழ ஊடுருவி நிறைந்திருக்கிறார். அதனை மறுதலித்து நீங்கள் செய்யும் இந்த கேலிக்கூத்து உங்களை தீயிட்டுப் பொசுக்கி விடும் . எதிரிகளினதும் துரோகிகளினதும் நிகழ்ச்சி நிரலை விளங்கிக் கொள்ளாமல் நீங்கள் செய்யும் மாபெரும் துரோகம் தமிழினத்தின் வரலாற்றில் கறைபடிந்த பக்கங்களை உருவாக்கும். கடந்த காலங்களில் நீங்கள் ஆற்றிய விடுதலைப்பணியைக் கேள்விக்குறியாக்கும். மக்கள் உங்களைக் காறி உமிழ்வார்கள்.

தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் என்றும் வாழும் அழிக்க முடியாத சித்தாந்தம். தமிழீழ விடுதலைக்கான கலங்கரை விளக்கம் . விளக்குக் கொளுத்தி அழித்துவிட நினைப்பவர்களே கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்! தம்பியாக்கள் சாப்பிட்டிட்டீங்களோ என வாஞ்சையோடு கேட்கும் தலைவரின் குரல் எங்களிற்கு கேட்கிறது. உங்களிற்கும் கேட்கும். அழிவிற்கான எதிரிகளின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்காமல் தமிழீழம் நோக்கி தானைத் தலைனின் ஒளிரும் பாதையில் ஓரணியில் ஒன்றாகுவோம்.

– அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி-