இலங்கை விவகாரத்தில் வலுவாக அழுத்தம் பிரயோகிக்குமாறு பிரிட்டன் தொழிற்கட்சி உறுப்பினர்களிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

140 0

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் தொழிற்கட்சி உறுப்பினர்களும், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றிவருவோருமான எட் டேவி, சியோபைன் மெக்டொனாக் மற்றும் பெரி கார்டினர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், கடந்தகால அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை அறிக்கை மென்போக்கைக் கடைப்பிடித்திருப்பதுபோல் தெரிவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

அதுமாத்திரமன்றி பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இவ்விடயத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் என்றும், இலங்கை அரசாங்கத்தின்மீது வலுவான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலளித்த தொழிற்கட்சி உறுப்பினர்கள், இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளையும், உள்ளக நிலைவரத்தையும் நன்கு ஆராய்ந்துபார்த்து, எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறான பொதுநிலைப்பாட்டின் அடிப்படையிலான பொறிமுறையொன்றை முன்மொழிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டுக்கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க இன்றைய தினம் (24) ஜெனிவா செல்லவுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாளைய தினம் (25) முதல் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.