கொழும்பு துறைமுக நகரத்தின் உரிமத்தை ரணில் விக்கிரமசிங்கவே இலங்கைக்கு உரித்தாக்கினார்

47 0

மஹிந்த ராஜபக்ஷவினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் உரிமத்தை ரணில் விக்கிரமசிங்கவே 99 வருட காலத்துக்கு புதுப்பித்து, இலங்கைக்கு உரித்தாக்கினார்.

கொழும்பு துறைமுக நகரத்து வழங்கப்பட்டுள்ள விசேட வரிச்சலுகை எதிர்காலத்தில் வணிக நகரம் என்ற இலக்குக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட  வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் அரசியல் நோக்கத்துக்காக தாமதப்படுத்தியது என பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளதை திருத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தான் துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் உறுதிப்பத்திரம் ஊடாக  வழங்கும் வகையில் தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை திருத்திக் கொள்வதற்காகவே துறைமுக அபிவிருத்தி நகர செயற்திட்டம் குறுகிய காலத்துக்கு இடை நிறுத்தப்பட்டன.

மஹிந்த ராஜபக்ஷவினால் சீனாவுக்கு முழுமையாக வழங்கிய கொழும்பு துறைமுக நகர வலயத்தை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 99 வருட கால ஒப்பந்த அடிப்படையில் திருத்தம் செய்தார்.

கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் அபிவிருத்தி  திட்டங்களை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது. முன்னாள் நிதி மூலதனச் சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டுக்கு அழைத்து வந்த முதலீட்டாளர் நிதி சலவை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வெளிநாட்டில் சிறை தண்டனைக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒட்டுமொத்த மக்களும் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுக பொருளாதார  நகரத்துக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.

துறைமுக நகரத்துக்கு முன்பாக உள்ள சங்ரில்லா ஹோட்டல் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஹோட்டல்களுக்கு சடுதியாக வரி  விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம்  விசேட வரி சலுகை வழங்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் வணிக நகர என்ற இலக்குக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்.