உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவாக்குவதற்கான ஒரு முயற்சி

78 0

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பது ஜனாதிபதியின் அதிகாரங்களை விரிவாக்குவதற்கான ஒரு முயற்சி என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15ம் திகதி அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்  திருத்தப்பட்ட சட்டமூலத்தை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கவனத்தில் எடுத்துள்ளது.

சட்டமூலத்தின் முன்னைய பதிப்பு 2023 மார்ச் மாதம் 22ம் திகதி வெளியானது.

சட்டமூலத்தின் முன்னைய வடிவம்  குறித்து பல கரிசனைகளை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வெளியிட்டிருந்தது.

 

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஆரம்பவடிவத்தில்  பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

தண்டனையில்  ஒன்றாக மரணதண்டனை நீக்கப்பட்டமை தடுப்பு உத்தரவு தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட்டமை  போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

இரண்டு மாதங்களிற்கு தடுப்பு உத்தரவினை வழங்குவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் திருத்தப்பட்ட சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்பதை மிகைப்படுத்துதல்  பயங்கரவாதத்திற்கான குற்றங்களை மிகைப்படுத்துதல் போன்ற சிக்கலான விடயங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

 

உத்தேச சட்டமூலத்தில்  குற்றச்சாட்டுகளை சுமத்தாமலே நீட்டிக்கப்பட்ட தடுப்புகாலங்கள் விளக்கமறியலை நீடித்தல் போன்றன காணப்படுகின்றன.

நீதித்துறை மற்றும் மனித உரிமைகளிற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் விதத்திலும் உத்தேச சட்டமூலம்காணப்படுகின்றது.

குறிப்பாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஊரடங்கு தொடர்பான உத்தரவுகள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது-அவை வெளிப்படையாக ஜனநாயகத்திற்கு முரணானவை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தை விரிவாக்க முயல்கின்றன.

2022 இல் அரகலய மூலம் ஜனாதிபதி பதவியை நீக்கவேண்டும் என மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கு மாறாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பது ஜனாதிபதியின் அதிகாரங்களை விரிவாக்குவதற்கான ஒரு முயற்சி என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்டவிரும்புகின்றது.

அதிகளவு அரசியல் பொறுப்புக்கூறல் ஆட்சிமுறையில் மாற்றம் போன்றவற்றிற்கான வேண்டுகோள்கள் வெளியாகியுள்ள போதிலும் அமைப்புகளை தடைசெய்வதற்கான அதிகாரங்கள் – கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை வெளியிடுவதற்கான அதிகாரங்கள் போன்றவை மூலம்  உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது.