ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பியுங்கள்… வெளிநாட்டவர்களை ஊக்குவிக்கும் சேன்ஸலர்

147 0

ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மன் குடியுரிமைக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதிவாக்கில் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதைத் தான் காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், ஜேர்மன் பெடரல் கேபினட், கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி, இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை மறுசீரமைப்பு மசோதாவை அங்கீகரித்தது.

புதிய குடியுரிமைத் திட்டங்களின் கீழ், கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

1. ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவேண்டுமானால், அவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை மாற்றி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தால் போதும் என முடிவு செய்யப்பட உள்ளது.

2. ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோரில் ஒருவராவது சட்டப்படி ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாக வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தைகள் தானாகவே ஜேர்மன் குடிமக்களாக ஆகிவிடுவார்கள்.

 

3. ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட உள்ளது. 

மேலும், 67 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், ஜேர்மன் மொழித்தேர்வை எழுதுவதற்கு பதிலாக, அது அவர்களுக்கு வாய்மொழித்தேர்வாக மாற்றப்பட உள்ளது.

இந்நிலையில்தான், இத்திட்டங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் வெளிப்படையாக பேசியுள்ள ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், தான் அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதைக் காண விரும்புவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.