6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு

320 0

6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாட்டு அகதிகள் அமெரிக்கா வருவதற்கு 120 நாட்கள் தடை விதித்தார். அதே நேரத்தில் அந்த 6 நாட்டு மக்களும் 90 நாட்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப் விதித்த இந்த பயணத் தடை அமலுக்கு வருவதற்கு முன்பே அந்நாட்டு உச்சநீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் நீதித்துறையின் தலையீடு அதிகமாக இருப்பதாக கடுமையாக சாடினார்.

தேசிய நலனுக்காக குடியேற்றங்களுக்கு தற்காலிக தடை விதிக்க இந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் அதிபருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிரம்ப் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி கிரீன்பெல்ட் மாவட்டத்தில் உள்ள மேரிலாண்ட் நீதிமன்றத்தில், வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் டிரம்பின் நீதித்துறை மேல்முறையீடு செய்துள்ளது.