தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ’புதிய மொந்தையில் பழைய கள்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை வாசிக்கும் முன்னர் அவர் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் பெயர்களை குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றதும் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை சட்டசபையில் புகழ்வது அவை மரபுக்கு எதிரானது. சசிகலா, தினகரன் ஆகியோரின் பெயர்களை அமைச்சர் கூறியது தவறான செயல். எனவே, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், சபாநாயகர் அதற்கு மறுத்து விட்டார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ’புதிய மொந்தையில் பழைய கள்’ என்பது போல ஏற்கனவே பல பட்ஜெட்டுகளில் கூறிய திட்டங்களை மீண்டும் கூறியுள்ளனர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து 3 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது. மாநிலத்தின் மொத்த வருவாயை விட கடனுக்கான வட்டி அதிகமாக உள்ளது. இதனால், மிகப் பெரிய கடனாளி என்ற சாதனையை தமிழகம் படைத்துள்ளது.
பட்ஜெட் உரையில் புதிய மின் திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட் தாக்கலின் போது அனைத்து அமைச்சர்களும் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு ஆனால் 4 அமைச்சர்கள் இன்று அவைக்கு வரவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

