முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்பாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இன்றைய தினம் கருத்து கோரவிருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நேற்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேப்பாப்புலவிலுள்ள இராணுவத்தினரது வசமிருக்கும் தங்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவ முகாமுக்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்களது பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இடம்பெற்றது.
மன்றில் முன்னிலையாகியிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மக்களின் போராட்டத்தினால் இராணுவம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பான தெளிவுபடுத்தினார்.
எனினும் இப்போராட்டத்தில் உள்ள நியாயமான காரணங்களை மன்றில் எடுத்துக்கூறிய மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி திருக்குமரன், மக்களிடம் இருந்தும் கருத்துக்களைப் பெற நீதிவான் அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்றைய தினம் மக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறவுள்ளதாக அறிவித்திருப்பதோடு வழக்கை இன்று வரை ஒத்திவைத்தது இந் நிலையில் தர்ப்போது வழக்கு இடம் பெற்று வருகிறது.

