முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று பதினைந்தாவது நாளாக நடைபெறுகிறது
மக்கள் தம்முடைய பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம் மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதோடு தமது காணிக்குள் செல்லாது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் இராணுவம் தமது அமைதிக்கு பாதகமாக மக்கள் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவித்து முள்ளியவளை பொலிஸ் நிலையத்தினூடாக வழக்கு ஒன்றை பதிவுசெய்து போராட்டத்தை நிறுத்த முயற்சித்துள்ளனர்
எனினும் இந்த வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் மக்கள் சார்பில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்ததோடு உண்மைத்தன்மையை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர் அத்தோடு மக்களையும் சாட்சியாக கொண்டுவருமாறு கோரியதற்கமைய வழக்கு நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது