ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வேன்: குஷ்பு

271 0

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சரோஜினி வரதப்பன் மகளிர் சங்கம் சார்பில் பெண்கள் தினவிழா நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, சாய்லெட்சுமி, தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகி ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசும்போது, “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராடும் துணிச்சலை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.கல்வி, சுயதொழில், வேலை வாய்ப்பு அனைத்திலும் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களின் முன்னேற்றம்தான் குடும்பத்தின் முன்னேற்றம். நாட்டின் முன்னேற்றம்” என்றார்.

பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஆளுமை இல்லை. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் பா.ஜனதா 2 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தோல்வியை பொறுக்க முடியாமல் மணிப்பூரிலும், கோவாவிலும் ஜனநாயக படுகொலை செய்ய முயற்சிக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.