தென் கொரியா அதிபர் பார்க் கியுன் ஹே-வை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.
இதையடுத்து, கடந்த முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் சோய் சூன் சில்-லுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார். இதற்கிடையில், அதிபர் பார்க் கியூன் ஹே, அரசுப் பணத்தை செலவிட்டு ஆண்களுக்கான செக்ஸ் எழுச்சியை தூண்டும் வயாகரா மாத்திரைகளை அதிகளவில் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி அதிபர் மாளிகை அளித்த விளக்கத்தில் ஆப்பிரிக்கா உள்ளிட்ட கடல்மட்டத்துக்கு மேலே அமைந்துள்ள நாடுகளுக்கு அதிபர் செல்லும்போது அவருடன் செல்லும் அதிகாரிகளுக்கு ஏற்படும் படபடப்பை போக்க இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விளக்கத்தை எதிக்கட்சியினரும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.இந்நிலையில், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஆண்டில் நடைபெற்றது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராக அதிபர் பதவியில் இருந்தவாறு பார்க் கியூன் ஹே செயல்பட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளதால் அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறேன் என நீதிபதி லீ ஜுங் மி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

