யாழில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகள் தடை செய்ய நடவடிக்கை – யாழ் அரசஅதிபர்

249 0
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகளை தடை செய்ய வேண்டும் என நேற்றைய தினம் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு குழாய் கிணறுகளும் ஓர் காரணமாக அமைவதனால் வீடுகள் , பொதுக் கட்டிடங்கள் அமைக்கும் போது அதற்கான அனுமதியில் குழாய் கிணறு அமைப்பது தொடர்பில் இறுக்கமான முடிவுகள் பின்பற்றப்படவேண்டும். அதாவது தனிப்பாவனை குழாய் கிணறுகள் ஆயின் சகல தரப்பின் ஆய்வின் பின் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் அமைக்க பிரதேச சபை மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுமதிக்கப்படலாம்
அதனைத் தவிர்த்து விடுதிகள் பொது இடங்களிற்கான சட்ட ஏற்பாட்டினை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அனுமதியின்றி குழாய் கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் மற்றும் கிணறு அமைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பின்பற்றப்படும். ஏனெனில் சில வருமான நோக்கம் கொண்டவர்களும் இவ்வாறு அதிக பாவனைக்கு முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.  எனவே இனிவரும் காலத்தில் அவ்வாறு அமைக்க அனுமதிக்கப்படாத்தோடு ஏற்கனவே முறையற்று அமைத்தவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.
அத்தோடு உரிய அனுமதிகளைப் பெற்று குழாய் கிணறுகள் அமைப்பவர்களும் அனுமழிக்கம்பட்ட அளவிலான குழாய் கிணறுகளை அமைக்கின்றனரா என்பதையும் உறுதிசெய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபையினர் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபையின் செயலாளர்கள் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.