ஐ.நா முன்றலில் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

631 0

சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன்; தங்கள் தேசத்தின் மீதான பற்றுருதியை மீண்டுமொருமுறை அனைத்துலகத்தின் காதுகளுக்கு உரத்துக் கூறினார்கள்.

06.03.2017 திங்கட்கிழமை அன்று சுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரலாக ஒலிக்க, அவர்கள் தாங்கிய பதாகைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து, நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலானது தமிழீழத் தேசியக்கொடி வானுயர ஏற்றப்பட்டு ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன் தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் ஆற்றிய உரைகள் மக்களின் மனதை நெகிழவைத்தது. இக் கவனயீர்ப்புப் பேரணியில் சிறப்புரை, எழுச்சி உரைகளுடன், பேரணிக்கான பிரகடனமும், உணர்வு வெளிப்பாடும் இடம்பெற்றிருந்தன.

பதினொரு நாட்களாக ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, பேரணியின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் பேரணி தொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.

தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்த மக்கள், தேசத்தை மீட்டெடுக்க எல்லாவித அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழீழத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும் உறுதி வழங்கி நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் உடல்கள் கொட்டும் மழையாலும், குளிராலும் விறைத்துப் போனாலும் தணியாத தாகத்துடன், மாவீரர் நாமத்துடன் கலைந்து சென்றனர்.