இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை.

239 0

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு…

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பணியகத்தை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும்.

வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதி தொடர்பாக கடப்பாடுகளை கால வரம்புடன் நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.

அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள் மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும். உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை இலங்கைக்கு அழைக்க வேண்டும். சித்திரவதை, பாலியல் வன்முறைக, ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும்,

மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும்.