எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு

221 0

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில், அஜூஅரவிந்த் என்பவர் தாக் கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

அந்த குற்றப்பத்திரிகை நகலை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும். குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், இவை எதுவும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை திருப்பூர், காஞ்சீபுரம் உள்பட 7 மாவட்டங்களில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், 2 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இதில் ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படவில்லை.

இதேபோல, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில்லை. குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் இழப்பீடும் வழங்குவதில்லை.

எனவே, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவினை முறையாக பின்பற்ற வேண்டும் என்று உள்துறை செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர், சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.