தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான பாதையில் செல்கிறது- அண்ணாமலை பேட்டி

96 0

சென்னை எழும்பூரில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர் ஒருவரை அரசியல் கட்சியினர் மிரட்டும் வகையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருந்து வருகிறது.

நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள், நாம் ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்ற தைரியம். நான் அவரிடம் எனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளேன். எந்த உதவியாக இருந்தாலும் பாஜக செய்யும் என்று அவரிடம் தெரிவித்துள்ளேன். தி.மு.க. அரசு மீது பொதுமக்கள் இடையே இருக்கும் வெறுப்பு ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

பால்விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் 1,200 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தவறான பாதையில் செல்லும் திமுக அரசின் போக்கை கண்டித்து தமிழகத்தில் அடுத்த கட்டமாக 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் நடத்தப்படும். மக்களின் அன்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளேன்.  தி.மு.க. அரசு மீதான மக்கள் கோபத்தின் குரலாக பா.ஜ.க. ஒலிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.