தமிழாலயங்களிற்கிடையிலான தமிழ்த்திறன் போட்டி 2017 யேர்மனி

419 0

தமிழாலயங்களில் விளைந்த தமிழ்….
உலகெங்கம்; வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே !! தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில் தமிழ் விளைந்து நிற்கின்றது.

நாடு முழுவதிலுமுள்ள நூற்றுக்கும் மேலான தமிழாலயப் பள்ளிகளில் தமிழ் மொழி பயிலும் மாணவர்களின் மொழித்திறனைக் கணிக்கும் வகையில் ஆண்டு தோறும் தமிழ்த்திறன்போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. நிகழ்வில் முக்கிய விடயங்களாக மனனப் போட்டி, உரையாற்றல், கவிதை, உறுப்பமைய எழுதுதல், கட்டுரை, சொல்வதெழுதுதல், வாசித்தல், ஓவியம் போன்றவற்றுக்கான திறன் கணிக்கப்படுகின்றது.

மூன்று நிலைகளில் போட்டிகள் வகுக்கப்பட்டுள்ன. தமிழாலய மட்டத்தில் முதல் நிலையாகவும், மாநில மட்டத்தில் இரண்டாம் நிலையாகவும் இறுதிநிலையாக நாடு தழுவிய மட்டத்தில் இறுதிப்போட்டியும் நடைபெறுகின்றது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பமாகிய இப்போட்டிகளுக்கான இறுதி நிலைப் போட்டிகள் சென்ற 18.02.2017 கிறீபில்ட் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறை மரபுகளில் கனமேனும் பிசகாது சரியாக 10.00மணிக்கு போட்டி நிகழ்வை தமிழ்த்திறன் போட்டிப்பிரிவின் பொறுப்பாளர் திரு. இராசதுரை மனோகரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்ப நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. சிறீரவீந்திரநாதன் அவர்களுடன் மாநிலச் செயற்பாட்டாளர்கள் மற்றும் துணை அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பாதிரியார் திரு. கோலன் அவர்களும் சிறப்பாகக்கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலிருந்தும் 418 போட்டியாளர்கள் 629 போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள். போட்டிகளை நடுநிலை தவறாது நடுவம் செய்வதற்கென சிறப்புப் பயிற்சியும் முதிர்ந்த அனுபவமும் பெற்ற 71 ஆசிரியர்கள் நடுவர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். அங்கு அமைக்கப்பட்ட பார்வையாளர்களுக்கான பொது மண்டபத்தில் விசேட போட்டிகளில் ஒன்றான உரையாற்றல் நடைபெற்றது. இப் போட்டிக்கான தலைப்பை உரியவரிடம் வழங்கி சில நிமிடங்கள் அத் தலைப்பை மையப்படுத்தி அவர் உரை நிகழ்த்த வேண்டும். அந்த விசேட நிகழ்வில் தமிழாலயத்தின் மாணவர்களின் உரை நிகழ்வைப் பார்வையிடும்போது தமிழாலயங்களில் தமிழ்மொழி வளர்ந்து, உயர்ந்து, விளைந்து நிற்பதற்குச் சாட்சியம் கூறியது.

அவ் இறுதிப் போட்டியில் முதல் மூன்று நிலையைப் பெறும் மாணவர்களை ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள 27வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கவுள்ளதாகத் தமிழ்த்திறன் போட்டிப் பிரிவினர் தீர்மானித்துள்ளார்கள்.

ஊதியம் ஒன்றாக இருந்தாலும் இரட்டை வாழ்க்கை முறைக்குள் தமது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றிபெற்ற மனிதர்களாக எமது பெற்றோர்கள் உயர்ந்து நிற்கின்றார்கள். யேர்மனிய நாட்டில் இருக்கும் நிர்வாக முறைகளுக்கு எவ்வகையிலும் தரம் குறையாது நிர்வாகப் பொறிமுறைகளை வகுத்து அவற்றைச் சரியான முறையில் கடைப்பிடித்துச் செயலாற்றும் நிர்வாகிகள், மற்றும் ஆசிரியர்களின் பங்கு இமயத்தக்குச் சமன். தங்களிடம் வழங்கப்பட்டுள்ள பிரிவுசார் பொறுப்புக்களை உணர்வோடும் விருப்போடும் ஏற்றுச் செயலாற்றும் பொறுப்பாளர்களின் தன்னலமற்ற பணிக்கு திரு. இராசதுரை மனோகரன் அவர்கள் ஒரு உதாரணம்.

6000 க்கு மேலான மாணவர்களிடையே தம் அறிவால் முதன்மை பெற்ற இந்த உயர்ந்த மனிதர்களை இன்று வாழ்த்துவதிலும் தமிழாலயங்கள் என்ற இந்தக் குடும்பத்தில் ஒருவராய் இணைந்து தமிழ்க் கல்விக் கழகம் என்ற தேரை இழுப்பதில் தன் விரல்களும் படுவதற்கு பல கோடி புண்ணியம் செய்துள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் (லோகன்) அவர்கள் குறிப்பிட்டு பெருமிதத்துடன் மகிழ்ந்தார்.