படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

257 0

இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது.

இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம் நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தாலும் பொலிஸாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 55 பெண்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, அவர்களுள் 48 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் 7 பேர் புதிய அரசாங்கத்தின் காலத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வவுனியா, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 4 பகுதிகளில் இவ்வாறான பாலியல் முகாம்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட 6 அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கையிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா, இவ்விடயங்களில் இலங்கை அரசாங்கம் எவ்வகையான நீதி விசாரணைகளை முன்னெடுக்கப் போகின்றதென பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.