நாம் என்ன செய்யப் போகிறோம்!
——————————————————–
” சின்னவன்
ஊருக்கு போயிற்று வந்திட்டானாம்!”
சொந்தங்களின் புலன் விசாரனை
சொந்த பந்தங்கள் முதல்
திருவிழாக்கள் வரை தொடரும்…
புலத்தினில் வாழும்
சின்னவன்ர வீட்டில
ஊர்ப்பற்று நிறைந்தோரும்
புதினம் கறக்க வந்தோரும்
சின்னவனை விசாரனை
வட்டத்துக்குள் இழுத்தனர்…
சின்னவனின் ஆழ்மனதில்
மௌனத்தின் முன்னும் பின்னும்
காட்சியாய் அலைமோதியது…
ஒப்புக்கு அவரவர்
ஆர்வத்தின் கேள்விகளுக்கு
பதிலுரைத்தான்…
வந்தவர்களும்
துணிமணிகளும்
ஒடியல், பனாட்டோடு
விடை பெற்றனர்…
‘
நினைவலை மோதுகிறது…
யுத்தக் களமாய் இருந்த
தமிழீழ பூமி
இரத்தக்கறை தோய்ந்த
பூமியாய் காட்சியளித்தது…
சின்னவனும் ஓர் போராளிதான்…
அவன் நினைவுகள் மீட்டலுக்குள்
நுழைந்தது…
புலிகளின் கட்டுமானங்கள்
எத்தனை ! எத்தனை!
தரைப்படையில் !
கடற்படையில்!
வான்படையில்!
வீர அலைகள் மூச்சோடு எழுந்த நேரம்..
நெருப்பாற்றில் இரத்த ஆறு சுண்டிய நேரம்…
முழுவீச்சோடு மூசியெழுந்த வீரரின் பாய்ச்சல்…
விடுதலை வேட்கையாய் உந்தியெழுந்து
தடையுடைத்த வீரம்…
அனைத்தும் மனத்திரையில்
வந்து போகின்றன…
ஆயிரக்கணக்கான
மாவீரர்களின் விதைப்பு…
இன்று…
அரசியல் கபட நாடகத்துள்
தியாகங்கள் புதைக்கப்பட்டு
மூடப்படும் நிலை…
அனைத்தையும் இழந்த நிலையில்
மாவீரர் குடும்பங்கள்…
சிங்கள அரசின் இனவெறிச்
சதி நாடகத்தின் தொடர்நிலை…
உணர்வலைகள்
சின்னவனின் நெஞ்சுக்குழியுள்
தீயை ஊற்றும் பிழிவு…
மாவீரர்களின் தியாகங்களுக்கு
நாம் என்ன பதில் கூறப் போகிறோம்?
அனைத்தையும் தேசத்துக்காய்
அர்பணித்த ஈகை மைந்தரின்
தியாக வாழ்வுக்கு
நாம் கூறும் பதில் என்ன?
“தலைவரின் மந்திரம்”
நான் பெரிது நீ பெரிது என்று எண்ணாதே! – நம்
நாடு பெரிது என்று எண்ணு நாடு பெ.ரிதாகும்…
பலமே உலகாளும் சக்தியென்றார் தலைவர்…
ஒற்றுமை பலம் பெற்று
அறிவின் ஆயுதம் ஏற்று
மாவீரர் கனவை நனவாக்குவோம்…
அதுவே மாவீரர் வணக்கமாகும்.
-அகரப்பாவலன்-