பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஓமான் தூதுரக அதிகாரி குறித்து வெளியான பல தகவல்கள்!

147 0

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கையின் ஓமான் தூதரக அதிகாரி தொடர்பில் இவ்வருடம்  பெப்ரவரி மாதம் முதல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு கணக்கு குழுவுக்கு  தெரியவந்தது.

மேலதிக கணக்காளர் நாயகம் பி.எல்.கே. பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில்,

28.02.2022 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் இந்த அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக பெரேரா சுட்டிக்காட்டினார்.

இவர் தொடர்பில் பண மோசடி, சான்றிதழ் மோசடி போன்ற விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் மேலதிக கணக்காளர்  நாயகம் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம் பெரும் விளம்பரம் பெறும் வரை நடவடிக்கை எடுக்காததற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோபா குழு  தனது கடும் அதிருப்தியை தெரிவித்தது.