கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு ; மேலும் ஒருவர் காயம்

146 0

நுவரெலியா –  ஹெலகம பகுதியில் இரு பெண்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்தவரின் மகள் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து பல ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஹெலகம பகுதியில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்திற்கு உலர் உணவு பெறச் சென்றுள்ளனர்.அங்கு மகளின் கணவர் பெயரில் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள மகளும் தாயும் முயற்சித்த போது மகளின் கணவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை எடுத்து தாயையும், மனைவியையும் கடுமையாக  தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

படுகாயமடைந்த தாயும், மகளும் தெரிபஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ரிக்கில கஸ்கட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் முகுனகஹபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவராவார். இந்நிலையில் 27 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரிபஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.