பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை ஆசிரியர் மீது தாக்குதல் !

121 0

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார்.

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.