இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்

354 0

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ)  ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு  கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் தனது கட்டளையை நிராகரித்ததன் காரணமாக இந்தியாவின் தலையீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக 1988 பெப்ரவரியில் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரியிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தன தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் இந்தியாவின் தலையீடானது வேறுபட்டதொரு சந்தர்ப்பத்திலேயே இடம்பெற்றது என்பதே உண்மையாகும்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணி:

ராஜீவ் காந்தி இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது சிறிலங்காவில் நிலவிய தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது. இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த போது, தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தியாவின் தமிழ்நாட்டை தமது ‘பாதுகாப்பு அரணாக’ பயன்படுத்துவதற்கு அனுமதியளித்திருந்தார்.

புதுடெல்லி மற்றும் சென்னை அரசாங்கங்களின் அரசியல் செல்வாக்குடன் தமிழ் ஆயுதக் குழுக்கள் தமக்கான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இவர்களுக்கான ஆயுதங்களும் நிதி உதவிகளும் தமிழ்நாட்டின் முன்னணி அரசியற்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க வினால் வழங்கப்பட்டன.

இவ்வாறான ஆதரவுடன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த தமிழ் ஆயுதக் குழுக்கள் தமக்கான அரசியல், இராணுவ, பரப்புரை, தொடர்பாடல்கள், பௌதீக அலுவலகங்கள் மற்றும் தளங்கள் போன்றவற்றை சென்னையில் விரிவாக்கிக் கொண்டன. பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தி தமிழ்க் குழுக்களின் நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுப்பதிலும் இந்திய மத்திய அரசு தயக்கம் காண்பித்தது.

சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட போது ‘இந்தியாவில் நிலவிய சாதகமான காரணி’ இவ்வாறான இழப்புக்களை ஈடுசெய்வதற்குப் பெரிதும் உதவியது. சிறிலங்காப் படைகளின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகள் அமைப்பு தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தது. இதனால் இவர்களை சிறிலங்காப் படையினர் முற்றுமுழுதாக ஒழிக்க முடியவில்லை. இதனால் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வகையில் சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் புலிகள் அமைப்பே பொறுப்பாளிகளாக இருந்தனர்.

ராஜீவ் காந்தி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் கோட்பாட்டை முற்றிலும் மாற்றியமைத்தார். ஆகவே  தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆயுதக் குழுவினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அரசியல் சார் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை ராஜீவ் காந்தி முன்வைத்தார். அத்துடன் தான் ஒருபோதும் தமிழ் ஆயுதக் குழுவினர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுவதற்கு அனுமதியளிக்கமாட்டேன் எனவும் ராஜீவ் காந்தி உறுதியளித்தார்.

அத்துடன் தமிழ் ஆயுதக் குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான உந்துதலையும் ராஜீவ் காந்தி வழங்கினார். இது தொடர்பாக அப்போதைய சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி 1985ன் ஆரம்பத்தில் இந்தியாவிற்குப் பயணம் செய்த போது கூறப்பட்டது. இது தொடர்பில் எட்டப்பட்ட அரசியல் கட்டமைப்பானது பல்வேறு சிக்கல்களின் மத்தியிலும் திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் 1987 ஜூலை மாதம் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரையான சிறிலங்காவின் அரசியலில் திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்த உதவியது.

ஜூலை 1987 உடன்படிக்கையானது அமைச்சர் காமினி திசநாயக்கவின் சிந்தனையாகக் காணப்பட்டது. அத்துலத்முதலி எதனைக் கருத்திற் கொண்டு இந்த உடன்படிக்கையை ஆரம்பித்தாரோ அதற்கு முற்றிலும் வேறுபட்ட வகையிலேயே இந்த உடன்படிக்கையானது காமினி திசநாயக்கவால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் மூலம் கொழும்பு மற்றும் புதுடெல்லி பெற்ற இருதரப்பு நலன்கள்:

சிறிலங்காவின் எல்லைக்கு வெளியே அதாவது தமிழ்நாட்டில் தமிழ் ஆயுதக்குழுக்கள் தஞ்சம் புகுந்திருந்ததால் இவர்களை சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் முற்றிலும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத சூழல் காணப்பட்டது. ஆகவே இந்த ஆயுதக் குழுக்களை சிறிலங்காவிற்குத் திருப்பி அழைப்பதன் மூலம் மட்டுமே இவர்களை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என அதிபர் ஜே.ஆர் கருதினார்.

இதற்கு இந்திய-இலங்கை உடன்படிக்கை இவருக்கு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தனர். இதற்கு அகதிகள் நிர்க்கதியாக உள்ளமை போன்ற விடயங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சார்பான ‘இந்தியக் காரணியை’ இல்லாதொழிப்பதற்கு ராஜீவ் காந்தி விரும்பினார். இதற்காகவே இவர் புதுபுதுடெல்லியால் முன்வைக்கப்பட்ட அரசியற் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.  அத்துடன் இந்தியாவிலிருந்து தமிழ்ப் பயங்கரவாதக் குழுக்களைப் பிரிக்க வேண்டும் எனவும் ஜே.ஆர் கருதினார்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமது அரசியலில் முதன்மைப்படுத்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைச் சமாதானப்படுத்துவதற்கு அரசியற் தீர்வொன்று அவசியமானது என்பதால் புதுடெல்லி அரசியற் கட்டமைப்பொன்றை பரிந்துரைந்தது.

சிறிலங்காவில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பதற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுதியான கோரிக்கையை எதிர்ப்பதற்காக தன்னால் பரிந்துரைக்கப்பட்ட அரசியற் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இதன்மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கி விடுவோம் என்கின்ற அச்சுறுத்தலை இல்லாதொழிக்க முடியும் எனவும் புதுடெல்லி கருதியது.

ஆனாலும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக  வெளியேறியமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்வை எட்டவில்லை என தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தனித்தமிழீழக் கோட்பாட்டைக் கைவிடாமையால், 1985ல் மேற்கொள்ளப்பட்ட திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் ஜூலை 1987 வரையான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. இதன்காரணமாக இந்தியா மீதும் புலிகள் அமைப்பு மீதும் சிறிலங்கா அரசாங்கம் ஆத்திரமடைந்ததுடன் இதுவே இராணுவத் தாக்குதல்களுக்கும் வழிவகுத்தது.

இதுவே ஜெனரல் சிறில் ரணதுங்க   1987ஆம் ஆண்டு மே மாதம் வடமராட்சி நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுத்தது. இதற்கு அமைச்சர் லலித் அத்துலத்முதலி தலைமை வகித்தார்.

வடமராட்சி தாக்குதல் நடவடிக்கைக்குப் பின்னர்:

வடமராட்சியில் பாரிய தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்ற பின்னர், யாழ்ப்பாணத்தை இழப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக புலிகள் கருதினர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக புலிகள் தமது ‘இந்தியக் காரணியை’ பயன்படுத்தி புதுடெல்லி மீது அழுத்தம் ஒன்றைப் பிரயோகித்தனர். அதாவது இந்திய மத்திய அரசாங்கம் இதில் தலையீடு செய்து உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் இதற்கு அதிகளவான மக்கள் சிறிலங்காவை விட்டு அகதிகளாக வெளியேறுவதைக் காரணமாகக் காண்பிக்குமாறும் கூறப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தியா தனது விமானங்களில் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொதிகளை வீசியது. இந்தியாவின் இத்தலையீடு காரணமாக சிறிலங்கா பலவந்தமாக தனது யுத்த முன்னெடுப்பை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா இதில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் சிறிலங்கா யாழ்ப்பாணத்தை நோக்கிய தனது படை நடவடிக்கையை நிறுத்தியிருக்கமாட்டாது.

அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடன்பட வேண்டிய நிலை உருவாகியது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தனது படைகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி புலிகளின் நிலை தொடர்பாக அறிய ஆவலாக இருந்தது.

அதாவது இந்தியா மற்றும் சிறிலங்கா அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட அரசியற் தீர்விற்கு புலிகள் இணங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தியா தனது படையினரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது. இதற்காக ஜூலை 29, 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கை வரையப்பட்டு இதன்மூலம் இந்தியப் படையினர் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிவடைந்ததன் காரணமாகவே அதிபர் ஜே.ஆர் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது என்கின்ற கருத்து முற்றிலும் சரியானதல்ல. வடமராட்சி இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததன் காரணமாக, இந்தியத் தலையீடு இடம்பெற்றது என்பதே உண்மையான விடயமாகும். இந்த யுத்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு புலிகள் தனது இந்தியக் காரணியை வெற்றிகரமாகப் பயன்படுத்தி இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொண்டனர்.

புலிகளின் நகர்வை தனது படைகளால் முறியடிக்க முடியவில்லை என்பது சரியானதே எனவும் இது தனது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது எனவும் இந்தியாவின் தலையீடு இருந்தமையால் இதனை முறியடிக்க முடியவில்லை எனவும் அதிபர் ஜே.ஆர் தெரிவித்திருந்தார்.

இந்தியப் படையினரை சிறிலங்காவிற்கு வரவழைப்பது உள்ளடங்கலான அரசியற் கட்டமைப்பின் மூலம் புலிகள் அமைப்பைத் தனது வழிக்குக் கொண்டு வந்து அரசியற் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள வைக்கலாம் என ஜே.ஆர் நினைத்திருந்தார். ஆனால் சமரசங்கள் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் மூலமும் யுத்தத்தைத் தொடரமுடியும் என்கின்ற நிலைப்பாட்டை அதிபர் ஜே.ஆர் உணர்ந்து கொண்டிருப்பார்.

ஜூலை 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையே இந்திய அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவிற்கு வருவதற்கான தூண்டலாக இருந்தமையை அதிபர் ஜே.ஆர் அறிந்து கொண்டார். இந்தியக் காரணியை அழிப்பதன் மூலம் புலிகளை இந்தியாவிடமிருந்து தனிமைப்படுத்தி, இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தத்தை ஏற்படுத்தலாம் என ஜே.ஆர் கணிப்பிட்டார்.

2001ல் நான் எழுதிய ‘“Dilemma of an Island என்கின்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன். ‘செப்ரெம்பர் 04, 1987ல் நான் அதிபர் ஜே.ஆருடன் அவரது இல்லத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டதை நினைவிற் கொள்கிறேன். அதாவது புலிகள் அமைப்பு தனது ஆயுதங்களின் பெரும்பகுதியை இந்திய-இலங்கை ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டு 72 மணித்தியாலங்களில் கையளிக்காததன் மூலம் அவர்கள் இந்த உடன்படிக்கையை மீறியுள்ளனர் என நான் அதிபர் ஜே.ஆரிடம் தெரிவித்த போது, ‘இது எனது பிரச்சினையில்லை, இது இந்தியாவின் பிரச்சினை’ என அவர் பதிலளித்திருந்தார்.

அவரது அந்தப் பதிலானது புலிகள் அமைப்பிற்கும் இந்தியப் படைக்கும் இடையில் யுத்தம் இடம்பெறுவதற்கு ஜே.ஆர் காத்திருந்தார் என்பதும் அவர் இதில் நம்பிக்கையுடனும் இருந்தார் என்பதையும் காண்பித்தது’

இந்திய-இலங்கை திட்டமானது திட்டமிட்டதன் பிரகாரம் இடம்பெறவிட்டால் அது தோல்வியில் முடிவடையும் என்பதை அதிபர் ஜே.ஆர் தெளிவாக நோக்கியிருந்தார். புலிகள் அரசியற் தீர்வை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் இடையில் யுத்தம் ஏற்படும் என்பதில் ஜே.ஆர் திருப்தியுற்றிருந்தார் என்பதையே அவர் என்னிடம் கூறிய கருத்துக்கள் மூலம் அறியமுடிந்தது. இவ்வாறானதொரு யுத்தம் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பை முடிவுக்குக் கொண்டு வரும் என ஜே.ஆர் கணித்திருந்தார்.

புலிகள் அமைப்புடனான யுத்தத்திற்கு திருப்பு முனையாக இருந்த இந்திய – இலங்கை உடன்படிக்கை:

1987 தொடக்கம் அதிபர் ஜே.ஆரின் நகர்வுகள் புலிகள் அமைப்புடன் இந்திய அமைதி காக்கும் படை யுத்தத்தை மேற்கொள்ளவும் இதன் காரணமாக 1000 வரையான இந்திய வீரர்கள் யுத்தத்தில் மரணிப்பதற்கும் 1991ல் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. இந்தியக் காரணி இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் யுத்தத்திற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த யுத்தமே ராஜபக்சவின் ஆட்சியின் போது இறுதிக்கட்டத்தை அடைந்தது.

இந்திய இராணுவத்தினர் யுத்தத்தில் கொல்லப்பட்டமை மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை போன்றன புலிகள் இந்தியாவின் ஆதரவை இழப்பதற்குக் காரணமாகியது. அத்துடன் புலிகள் தமிழ்நாட்டின் ஆதரவையும் இழக்க வேண்டியேற்பட்டது.

குறைகள் மற்றும் தவறுகள்:

புலிகளை இந்தியா குறைவாக மதிப்பிட்டது. அரசியற் தீர்வொன்றைப் புலிகள் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்த்தே தனது படையை சிறிலங்காவிற்கு அனுப்பியது. புலிகள் தமது பெருமளவான ஆயுதங்களைக் கையளிக்க மறுத்ததுடன், இந்திய-இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதமிருந்து மரணித்தார். இவரது மரணம் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது.

ஆனாலும் இந்திய அமைதி காக்கும் படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுக்கவில்லை அத்துடன் சிறிலங்காப் படைகளை யுத்தத்தில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்கவில்லை. சிறிலங்காவின் உயர் மட்டத்தினர் இந்தியாவின் உயர் மட்டத்துடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் நிலைமை மேலும் மோசமாகியது.

புலனாய்வு அமைப்புக்களின் ஊடாக தொடர்பை ஏற்படுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கூறுவதற்காக என்னை புதுடெல்லிக்கு விரைந்து செல்லுமாறு அதிபர் ஜே.ஆர் கட்டளையிட்டார். இவ்வாறானதொரு சூழலிலேயே புலிகள் அமைப்பிற்கும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமாகியது.

எதிர்பார்க்காத நிகழ்வுகள் இடம்பெறும் போது அவற்றை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பான உறுதிப்பாடுகள் இந்திய-இலங்கை ஒப்பந்ததில் குறிப்பிடப்படாமையே இது தோல்வியடைந்தமைக்கு காரணமாகும்.

இந்திய அமைதி காக்கும் படையினர் பல தியாகங்களைச் செய்தனர். இவர்களில் பலர் யுத்தத்தில் உயிர்நீத்தனர். ஆனால் அவர்களால் புலிகளை முல்லைத்தீவுக் காட்டிற்குள் விரட்டியடிக்க முடியவில்லை. புலிகள் தமக்கான தமிழ்த் தேசிய இராணுவத்தை வளர்த்துக்கொண்டனர். இவர்களால் புலிகளை முற்றுமுழுதாக தோல்வியடையச் செய்ய முடியுமாயிருந்திருந்தால், பூகோள அரசியல் மற்றும் உண்மையான அரசியல் எவ்வாறு செயல்புரிந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருப்பினும், இந்திய அமைதி காக்கும் படையினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நகர்வுகளை அதிபர் பிறேமதாச முன்னெடுத்தார்.

வரலாறு என்பது நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை சரியாக பதிவு செய்வதேயாகும். இது ஒரு எடுகோளாக இருக்கக் கூடாது. அதிபர் ஜே.ஆரின் முயற்சியாக புலிகளுக்கு எதிராக இந்தியாவைப் பயன்படுத்தியமை, குறிப்பாக ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரான சூழல், இந்திய அமைதி காக்கும் படை வெளியேற்றப்பட்டமை போன்ற நிகழ்வுகள் தற்போது புலிகள் அமைப்பை வெற்றி கொள்வதற்கு உதவியுள்ளது. ஆகவே 1987 ஜூலை உடன்படிக்கை  சிறிலங்காவிற்கு நன்மையும் அளித்துள்ளது.

தமிழ்ப் பயங்கரவாதப் பிரச்சினை பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தது. இது தனியே இராணுவ சார் அச்சுறுத்தலாக மட்டும் அமையவில்லை. இது பல முகங்களைக் கொண்டிருந்தது. தமிழர் பிரச்சினைகளை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. அரசியல் மற்றும் இராஜதந்திர உந்துதல்கள் இந்தியக் காரணிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் காணப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி, ஆயுத உதவிகளை வழங்க உதவியதுடன் பரப்புரை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

1985ன் ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஜெயநாத் ராஜபக்ச மற்றும் நானும் சேர்ந்து தமிழர் பிரச்சினையை முழுமையாக நோக்குவதற்கான திட்டம் ஒன்றை வரைந்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினோம். இதனை முதன்மையாகக் கொண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முற்றுமுழுதாக ஆராய்ந்திருந்தால் தவறுகளை நீக்கியிருக்க முடியும்.

நான் 2001ல் எழுதிய நூலில் ‘1985ன் ஆரம்பத்தில், வெளிவிவகார அமைச்சின் தென்னாசியாவிற்கான இயக்குனராகப் பணியாற்றிய ஜெயநாத் ராஜபக்ச மற்றும் நானும் இணைந்து கொள்கை திட்டமிடல் ஆணைக்குழுவின் கூட்டு பரிந்துரை ஒன்றைக் கையளித்திருந்தோம். இது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வை வரையறுப்பதற்கு உதவக்கூடிய வகையிலேயே பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நாங்கள் சமர்ப்பித்த பரிந்துரை தொடர்பாக எவ்வித பதிலையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்’ என குறிப்பிட்டுள்ளேன்.

அமைச்சரவைச் செயலர் GVP சமரசிங்க மற்றும் அதிபரின் செயலாளர் மெனிக்டிவெல ஆகியோரிடம் இப்பரிந்துரையை மீளவும் ஆராயுமாறு அதிபர் ஜே.ஆர் கட்டளையிட்டிருந்தார். இந்த நோக்கத்திற்காக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான இராப்போசனம் ஒன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நாங்கள் மிகவும் சுவையான உணவை உண்டோம், ஆனால் இந்தப் பரிந்துரை தொடர்பாக ஒரு வார்த்தை கூட இங்கு பேசப்படவில்லை.

வழிமூலம்       – The island
ஆங்கிலத்தில்  – Merril Gunaratne
மொழியாக்கம் – நித்தியபாரதி

(Merril Gunaratne served as Director General of Intelligence and Security in the Ministry of Defence and as Director of National Iintelligence in the 1980’s )