அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த இயலாது

170 0

உள்ளூராட்சி  மன்ற தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கான பூர்வாங்கல் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, அரசாங்கத்தின்  முழுமையான  ஒத்துழைப்புகள் கிடைக்காத நிலையில் தேர்தல் இலக்கை வெற்றிக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில் வெளியிட முடியும்.

ஆனால் தேர்தலுக்கான நிதி ஒத்துக்கீடு, அரச அதிகாரிகளை தேர்தல் பணிக்காக விடுவித்தல் மற்றும் எரிப்பொருள் பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை  குறைப்பதா? இல்லையா? போன்ற பிரதானமான பிரச்சினைகளுக்கு  அரசாங்கம் உறுதியான தீர்வை வழங்காத நிலையில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் 21 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் புதிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கும் வரை தற்போதைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடைக்கால நிர்வாகியாக செயற்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.

எனவே இடைக்கால ஆணைக்குழு ஒன்றினால் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது.

இதேவேளை, 8 ஆயிரம் கொண்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தொகையை திடீரென 4 ஆயிரமாக குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறு குறைப்பது  என்பது சாத்தியமற்றதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ள போதிலும் அதனை உத்தியோகப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறில்லாது தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் மேலும் தீவிரமடையும். எனவே தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை அறிவித்து அரசாங்கம் அதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க ஆணைக்குழுவிற்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.