ஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப மக்கள் வலுவான புரட்சியில் ஈடுபட வேண்டும்

149 0

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரை நாட்டு மக்கள் உண்ணாமல், உடுத்தாமல் இருக்க முடியுமா,பாராளுமன்றம் மேன்மை பொருந்தியது என்று குறிப்பிடுவதால் மக்களின் பசி தீராது.

நெருக்கடியால் சிக்குண்ட மக்களின் வெறுப்பு போராட்டமாக நிச்சயம் வெளிப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டத்தை அரகலய என குறிப்பிடுவதை நீக்கி மக்கள் புரட்சி என குறிப்பிட வேண்டும்.ஊழல்  அரசியல்வாதிகளை தேர்தல் ஊடாக ஒருபோதும் வீட்டுக்கு அனுப்ப முடியாது,

போராட்டம் ஊடாகவே அரசியலில் இருந்து புறக்கணிக்க முடியும். ஆகவே நாட்டு மக்கள் வலுவான புரட்சியில் ஈடுப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்வதற்கான விதப்புரை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடு வீழ்ச்சியடைவதற்கு பாராளுமன்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. தேசிய சபை என்பதொன்றை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதனால் நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா,பாரம்பரியமான அரசியல் கலாசாரங்களே இன்றும் இடம்பெறுகிறது.

நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் பாரிய பங்களிப்பு செய்துள்ளது.இந்நிறுவனம் வருடாந்தம் சுமார் 5,000 கோடி நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் சிறிலங்கன் நிறுவனத்தின் தலைவராக அப்போதைய ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர் நியமிக்கப்பட்டார் அவருக்கு 50 இலட்சம் ரூபா மாத சம்பளம் வழங்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவன தலைவருக்கு மாத சம்பளம் 100 இலட்சம் வழங்கப்பட்டது.மறுபுறம் இராணுவத்தில் இருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி ஒருவருக்கு 30 இலட்சம் ரூபா மாத மேலதிக கொடுப்பனவு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனததின் விமான கொள்வனவு ஊடாகவும் அரச நிதி மோசடி செய்யப்பட்டது.இந்நிறுவனத்தின் முறைகேடுகள் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணியாக உள்ளது.

நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள துயர நிலை கவலைக்குரியது.அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் 79 சதவீதமானோர் போசணையான உணவை தவிர்த்து தரமற்ற உணவை தமது மூன்று வேளை உணவாக உட்கொள்கிறார்கள்.

வாழ்க்கை செலவு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.ஆனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரம் நம்பியுள்ளது. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரை நாட்டு மக்கள் உண்ணாமல்,உடுத்தாமல் இருப்பதா,

பல்வேறு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வெறுப்பு நிச்சயம் போராட்டமாக வெளிவரும்.நாட்டின் விவசாயத்துறையை முழுமையாக இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சேதன பசளை திட்டம் தொடர்பில் ஆளும் தரப்பினர் வெட்கமில்லாமல் பேசி திரிகிறார்கள்.

போராட்டததை அரகலய என குறிப்பிடுவதை நீக்கிக்கொள்ள வேண்டும்.மக்களின் ஒன்றிணைந்த புரட்சி என குறிப்பிட வேண்டும்.போராட்டத்தினால் ஊழல் அரசியல்வாதிகள் தலைமறைவாகினார்கள்.

பலர் பதவி விலகினார்கள்.தேர்தல் ஊடாக ஊழல் அரசியல்வாதிகளை ஒருபோதும் அரசியலில் இருந்து புறக்கணிக்க முடியாது.

மக்கள் போராட்டம் ஊடாகவே ஊழல் அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஒதுக்க முடியும்,ஆகவே நாட்டு மக்கள் ஊழல் அரசியலுக்கு எதிராக புரட்சியில் ஈடுப்பட வேண்டும்.போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும் என்றார்.