யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

609 0

கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது.

தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்றபோட்டியை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப்பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது.

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம்,
பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாகக் கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகளின் வரிசையில் சென்ற 12.02.2017  Münster நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.
வட மத்திய மாநிலத்துக்கான நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

1. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மத்திய மாநிலப் பொறுப்பாளர்களாகிய
திரு. nஐயக்குமார் அவர்களும்
2. திரு ராசா அண்ணா அவர்களும்

3. தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நைனே நகரச் செயற்பாட்டாளர் திருமதி சாந்த அக்கா அவர்களும்

4. தமிழ்க் கல்விக் கழகத்தின் மாநிலச் செயற்பாட்டாளர் திருமதி வளர்மதி அவர்களும்

5. கலைத்திறன் போட்டிகளின் நடுவர் திருமதி ஈழவாணி அவர்களும்

விளக்கேற்றி விழாவை மங்கலமாக ஆரம்பித்துவைத்தனர்.

வட மத்திய மாநிலத்திலுள்ள 31 தமிழாலயங்களிலிருந்து 160 க்கு மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டார்கள்.
போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலை வல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாநிலப் போட்டிகளின் வரிசையில் 25.02.2017 வடமாநிலத்திற்கான போட்டிகள் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக நடுவச் செயலகத்திலிருந்து கலைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மாநிலப் போட்டிகள் நிறைவுபெற்றபின் 18.03.2017 சனிக்கிழமை நாடு தழுவியமட்டத்திலான இறுதிப்போட்டி யேர்மனியின் மையப்பகுதியில் நடைபெறுவதற்கான எல்லாவகையான நிர்வாகப் பொறிமுறைகளும் நிறைவாகியுள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் ( லோகன் ) அவர்கள் குறிப்பிட்டார்.