லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் 3,500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழப்பு- ஐ.நா.தகவல்

165 0

உக்ரைனுக்கு ராணுவ உதவி உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

14.05.2022
06.50: ரஷியா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உள்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என ரஷியா மறுத்துள்ளது
04.10: உக்ரைனை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷியாவின் தோல்வி வெளிப்படையானது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் வான்வெளித் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் உண்மையை மறைக்க ரஷிய படைகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
02.30: நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் ஜோ பைடன்  தொலைபேசி மூலம் பேசினார். உக்ரைன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுதிபாடு குறித்து இரு தலைவர்களுடன் பைடன் விவாதித்தாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.30: உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது, கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே பெரும்பாலான  உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.
12.10: உக்ரைனுக்கு ராணுவ உதவி உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.  ரஷிய ஆக்ரமிப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர்  பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
13.05.2022
22:00: உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து, கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டு, அண்டை நாடான போலந்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், உக்ரைன் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
18:00: உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரி குலேபா, ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, பல ஏவுகணைகளை ஏவக்கூடிய ராக்கெட் அமைப்புகள், ராணுவ விமானங்கள் உட்பட அதிக ஆயுதங்களை வழங்குமாறு ஜி7 நாடுகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
15:30: உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ராணுவ ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார். ரஷியாவின் கச்சா எண்ணெய் மீதான தடைக்கான ஒப்பந்தம் வரும் நாட்களில் எட்டப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
15:00: உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்குவதன் வாயிலாகவும், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமும், ரஷியா மீதான அழுத்தத்தை தொடர வேண்டியது அவசியம் என பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் தெரிவித்தார்.
13:30: கிழக்கு உக்ரைனில் உள்ள பல கிராமங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்களை நடத்தியதாகவும், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளை விரிவுபடுத்த முயன்றதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அதேசமயம், ரஷியாவின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
13.00: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத் தட்டுப்பாடு அபாயத்தில் உள்ளன என்றார்.