விசா தடை இந்தியர்களை குறிவைத்து செய்தது அல்ல – சீனா சொல்கிறது

173 0

இந்தியர்களுக்கு விசா தடை குறிவைத்து செய்தது அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மீண்டும் சீனாவுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சீனா விசா வழங்க மறுப்பதே அதற்கு காரணம். இதுதொடர்பாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய தூதரின் கண்டனம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் இன்னும் கொரோனா பரவி வருகிறது. எனவே சட்டத்தின் அடிப்படையில், விஞ்ஞானரீதியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சீனா கடைப்பிடித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தக் கட்டுப்பாடுகள் சரியானதுதான். விசா வழங்க தடை விதித்தது, இந்தியர்களை குறிவைத்து செய்தது அல்ல. நாடு திரும்ப விரும்பும் சீன குடிமகன்களுக்கும் இது பொருந்தும். இந்தக் கட்டுப்பாடுகளை இப்போதைக்கு தளர்த்த வாய்ப்பில்லை என தெரிவித்தார்.