மதுபோதையில் வீட்டினுள் சென்ற குழுவினர் கண் மூடித்தனமாக தாக்குதல் -மூவர் பலத்த காயம்.

235 0

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் (வயது-44) என்பவா் கடுமையான காயங்களுக்குள்ளாகி பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த வீட்டிலிருந்த 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரும்,15 வயதுடைய மாணவி ஒருவரும் காயமடைந்த நிலையில் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் காரணமாக வீட்டில் உள்ள இரு குழந்தைகள் அச்சமடைந்துள்ள நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீடு கடுமையான தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு குறித்த பகுதிக்குச் சென்ற அடம்பன் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தோடு வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் (வயது-44) என்ற குடும்பஸ்தர் சுய நினைவற்ற நிலையில் உள்ளதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.