யாழில் ஆவா குழு உறுப்பினர் உட்பட நால்வர் போதைப் பொருள், வாளுடன் கைது!

150 0

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் காவல்துறையினரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 2 தசம் 94 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள், கார் என்பன கைப்பற்றப்பட்டு சந்தேகநபர்கள் நால்வரும் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு தலைமை காவல்துறை அதிகாரி சி.ஐ.பிரான்சிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் முத்து என்று அழைக்கப்படும் ஆவா குழுவை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த முத்து என்பவர் இலங்கையில் உள்ள பிரபல போதைபொருள் வர்த்தகருடன் தொடர்பு இருந்ததாகவும் ஏனைய மூவரும் பத்தொன்பது வயதை உடையவர்கள் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நீதிமன்ற அனுமதி பெற்று கைதானவர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டனர்.