மன்னாரில் சோதனை சாவடிகளில் கொவிட் அட்டை பரிசோதனை

166 0

மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட அட்டைகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி முதல் கட்டமாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் அவர்களின் முழுமையான விபரங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் பதிவு செய்கின்றனர்.

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தவும், அல்லது அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவும் தருவாயை எட்டியுள்ளது.

இதன்படி அந்த மாவட்டத்தில் இதுவரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும், 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.