தந்தையின் செயலால் கொலையாளிகளான இரு மகன்கள்!

186 0

சூரியவெவ, மஹபெலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சூரியவெவ, மஹபெலெஸ்ஸ, உணுதியபொகுன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 34 வயதான பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி படுக்கையில் உறக்கத்தில் இருந்தபோது கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதான இரு சகோதரர்களும், அவர்களின் நண்பரான 22 வயதான இளைஞரொருவரும் கைது செய்யப்பட்டனர்.

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரும், உயிரிழந்த பெண் தொடர்பினை பேணிவந்த நபரொருவரின் மகன்கள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான இரு சகோதரர்களின் தந்தை நீண்டகாலமாக குறித்த பெண்ணுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவினை பேணிவந்துள்ளார் என்றும், இதனால் தனது மனைவியுடன் அவர் நாளாந்தம் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை பொறுத்துக்கொள்ள இயலாதமையினால், அந்நபரின் மகன்கள் இருவர் தமது நண்பனுடன் இணைந்து அப்பெண்ணை கொலை செய்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.