இலங்கையில் முடக்கல் நிலை நீக்கப்பட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
இலங்கையில் திங்கட்கிழமை நாடாளாவிய முடக்கல் நிலைமையை நீக்குவதாலும் பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாலும் கொரோனா உயிரிழப்புகள் 16,700 ஆக அதிகரிக்கும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 வரை நாட்டை முடக்கினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 13172 ஆக காணப்படும் பொருளாதார ரீதியில் 1.67 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை நாட்டை முடக்கினால் உயிரிழப்புகள் 10,400 ஆக குறையும் பொருளாதார ரீதியிலான இழப்பு 2.2 பில்லியன் டொலராக காணப்படும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பதாம் திகதி முடக்கல் நிலை முடிவிற்கு வந்தால் அதன் பின்னர் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தினால் பொருளாதாரத்திற்கு1.12 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் செப்டம்பர் 18 வரையிலான நான்கு வார கால முடக்கல் காரணமாக 1.67 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்,ஆறு வார கால முடக்கல் நிலையால் 2.22 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.