சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் தூக்குப்பாலம் வழியாக வரும்போது சென்சார் கருவி ஒன்றில் இருந்து சத்தம் வந்ததுடன் லேசான அதிர்வும் ஏற்பட்டது.ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தூக்குப்பாலம் வழியாக ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் பாதிப்புகள் மற்றும் அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் தூக்குப்பாலம் வழியாக வரும்போது சென்சார் கருவி ஒன்றில் இருந்து சத்தம் வந்ததுடன் லேசான அதிர்வும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் ஐ.ஐ.டி. குழுவினரும் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி வரை பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

சென்னை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

