தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய தூதுவருக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

235 0

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்கு கொழும்புக்கு வந்திருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்ந்தும் கொழும்பிலேயே தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, இந்திய தூதுவருடனான சந்திப்பில் கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சந்திப்பு ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பிற்கு சென்ற கூட்டமைப்பின் தலைவர்கள், இந்த சந்திப்பிற்கான தொடர்ந்து கொழும்பில் தங்கியுள்ளனர். இந்த சந்திப்பிற்கான அழைப்பை இந்திய தூதரகமே விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.